Sunday, September 4, 2016

An open letter to all Sankaracharyas on the declining quality of Purohitham

தடம் மாறும் புரோகிதர்கள் - தவிக்கும் கிரஹஸ்தர்கள்


பெரு மதிப்புக்குரிய  பெரியவாளுக்கு அனேக கோடி நமஸ்காரம்.

 இந்த மடலை நீங்கள் படிப்பதற்கு முன்னர் ஒன்று தெளிவு படுத்த விரும்புகிறேன். நான் நாஸ்திகனோ அல்லது சீர்திருத்த வாதியோ அல்ல. அரசியலில்  ஈடுபாடு  கிடையாது. மத நம்பிக்கை மிகுந்த பாரம் பரியத்தில் பிடிப்புள்ள  குடும்பத்தைச்  சேர்ந்தவன்தான்.  கும்பகோணத்தில் எங்கள் விடு ராஜா வேத பாடசாலைக்கு மிக அருகாமையில் அ மைந்துள்ளது. நான் பள்ளியில் படிக்கும் போது நவராத்திரியின் பூஜைகளில் தவறாமல் சாம வேத பாரா யணம்  நடைபெறுவதை பார்த்திருக்கிறேன். ஓரளவு அத்யயனம் செய் தும் இருக்கிறேன். எனக்கு வைதிகர்கள் மேல் மிகுந்த அன்பும் அபிமானமும் உண்டு. .
ஆனால், தற்போதைய நிலைமை கண்டு நான் கண்ணீர் வ டிக்காத குறைதான். அதெப்படி நீ சொல்கிறாய்? என்ன ஆதாரம் என்று கேட்பவர்களுக்கு  ஒரு பதில். நான் சென்ற வாரம் தான் என் மகள் திருமணத்தை நடத்தியிருக் கிறேன். இது ஒரு அனுபவம் பத்தாதா?

"இன்றைய வணிக  மயமாகிப்போன உலகத்தில் வைதிகர்கள் பணம் வாங்கக்கூடாதா ? என்ற கேள்வி நியாயமானதே. அது பற்றி  நான் கேட்க வரவில்லை. தியாக உணர்வோடு எளிமையான வாழ்க்கை வாழ்ந்த மஹாநுபாவர்கள் இன்று இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், வணிக உலகத்தில் கூட சில வழி முறைகள் பின்பற்றப்படும் . பணம் கொடுப்பவர் சில எதிர்பார்ப்புக்களை சொல்வதும் அந்த சேவையை செய்யும் நிறுவன ங்களோ தனியாட்களோ அந்த எதிர்பார்ப்புக்களை கவனமாக உள்வாங்கிக்கொண்டு  பணி  புரிவதை நாம் பார்க்கிறோம். ஆனால், வைதிகர்கள் விஷயத்தில் இது நடப்பதில்லை.
உதாரணமாக, நான் ஒரு  மிக பெயர் பெற்ற புரோஹிதரிடம்  என் மகள் திருமண விஷயமாக பேச சென்றிருந்தேன். முதல் கேள்வி அவர் என்னை க்கேட்டார், " சார், உங்களுக்கு வேதம் தெரிஞ்ச சாஸ்திரிகள் வேணுமா? இல்லை தெரியாதவா வேணுமா? " எனக்கு தூக்கி வாரிப்போட்டது. எந்த தொழிலாவது இந்த மோசமான நிலைக்கு வந்திருக்கிறதா? ஒரு டிரைவரோ , வெல்டரோ இந்த கேள்வியை க்கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் ? ஆனால் கேட்டவர் எல்லாராலும் மதிக்கப்படுகிற  நம் இந்து மதத்தினால் அங்கீகரிக்கப்பட்டவர் . எனக்கு  வழி காட்டும் ஸ்தானத்தில் உள்ள  புரோகிதர் கேட்கிறார்.  
பின்னர் அவரே ஒரு விளக்கத்தை தந்தார். " ஒரு சாஸ்திரிகளுக்கு 2500 ரூபாய். நீங்கள் தர ஒத்துக்கொண்ட 35000 த்தில் இரண்டு பேர்தான் வருவார்கள். கூட வேண்டுமென்றால் கூட பணம் ஆகும் என்கிறார். "
" கொடுக்கிறேன். நீங்கள் வரு வீர்கள்   அல்லவா? " என்றதும் அவர் சொன்னார் " அதெல்லாம் பகவத் சங்கல்பம். அன்று வேறு ஏதாவது எனக்கு ஏற்கெனவே தெரிந்தவர் (உபாத்யாயம்) வீட்டில் எந்த காரியமும் இல்லையென்றால் வருவேன்" என்கிறார். எல்லோரும் வசை பா டுகிற   , பிளம்பரும், எலெக்டிரிஷியனும் இப்படி   சொன்னால் நாம் சும்மா விடுவோமா?   கமிட்மென்ட்  என்பது வைதீகர்களுக்கும்  பொருந்தும் அல்லவா ?
திருமணம் நடை பெறும்  போது  இடையில் இரண்டு வைதிகர்கள் தங்களுக்குள்  கருத்துக்களை பரிமாறிக்கொள்வது சகஜம். ஆனால், வார்த்தைகள் அளவோடும் கவுரவமாகவும்  இருக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர வேண்டும்.   ஒரு திருமணம் என்பது   புனிதமான  நிகழ்வு. அதில் சிலேடைப்பேச்சுக்களுக்கும் , நையாண்டிக்கும் இடம் இல்லை. மேடையில் அமர்ந்து கொண்டு சிரிப்பது வீடியோவில் பதியும்  என்பதை   நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இன்னொரு விஷயம் . ஏற்கெனவே டென் ஷ னில் இருக்கும் பெண் வீ ட்டவரையும்  மற்றவரையும் குட்டை   குழப்பி ஆதாயம் தேடக்கூடாது. ஒருவரை கூப்பிட்டு "வெள்ளி தம்பளரை  எடுத்து வா என்று சொல்வது பிறகு இன்னொருவரைக்கூப்பிட்டு இதை வைத்து விட்டு வா என்று சொல்வது பிறகு அவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்வதை  பார்த்து ரசிப்பது தவறானது அல்லவா ?
 ஒருவர் பேசுவதை வைத்து அவரை எல்லோரும் எடை  போடுவார்கள்.  இங்கும் வைதிகர்கள் தடம் புரண்டு போனதை கண் கூடாக பார்த்தேன். தாலி காட்டும் முன்னர்  ஒரு புரோகிதர் எழுந்து  மைக்கின் முன் தாலி பற்றி  விளக்க  ஆரம்பித்தார்.  இது மிகவும் நல்லதோரு பழக்கம். ஆனால், எல்லோரும் ஆர்வமாக க்கேட்டுக்கொண்டிருக்கும்போதே  "சைட்" அடி ப்பது, " லவ் லெட்டர் எழுதுவது" என்பது போன்ற வார்த்தைகளை  அந்த நல்ல நேரத்தில் உபயோகித்து  தனது பே ச்சின் மூலம் அந்த புனிதமான நேரத்தை க்  கொச்சைப்படுத்தினார். 

இறுதியாக மனதை வருந்த செய்த சம்பவம். ஆசீர்வாதங்கள் பரிசுகள் கொடுக்கப்படும் நேரம். ஒருவர்     பரிசாக தம்பதிக்கு    தட்டில் வைக்கும்  பணத்தை புரோகிதர் எண் ணு  ம் வழக்கம் இல்லை. ஆனால் இங்கு தாடியுடன் மிக கம்பிரமாக அமர்ந்திருந்த வாத்யார் அந்த நோட்டுக்களை எண்ணி மிக சுவாதீனமாக சில்லறை மாற்றிக்கொண்டார்.

காஞ்சி பெரியவா ஆசிர்வாதம் என்று   முதல் நாளே ஒரு நல்லவர் கொ ண்டு வந்திருந்த  ஸ்படிக  மாலையும்,பாதுகையின்  வடிவு வெள்ளி பிம்பமும் கொடுக்கப்பட்டது. அவை இரண்டையும்  முறையே மணமகனுக்கும், மணமகளுக்கும்  கொடுக்க வேண்டுமென்று எங்களுக்கு சொல்லியிருந்தார்கள்.  அதை ஆசிர்வாதம்  செய்து கொடுத்தவுடன், ஒரு வாத்யார்  சும்மா இருக்காமல், " ஸ்படிக மாலையெல்லாம் பிள்ளை யை போட்டுக்க சொல்லாதீங்கோ. " என்று சொல்லி நான் இங்கு எழுத இயலாத வார்த்தைகளை கொட்டினார்.  மனத்துக்குள் "  அபச்சாரம்,பெரியவா மன்னிச்சுக்குங்கோ" என்று சொல்வதை தவிர நான் என்ன முடியும் ? அவருக்கு ஸ்படிக மாலையை பற்றி ஒரு மாறான  கருத்து இருந்தாலும் அதை என்னிடம் அப்புறம் தனி யாக சொல்லியிருக்கலாமே?  . இங்கிதம் தெரியவில்லையா இல்லை தனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பா?   .

மனத்துக்கு நிம்மதி கொடுக்கும் வண்ணம் பேசிய புரோகிதர்களும், பார்வையினாலேயே மரியாதையை சம்பாதித்த பெரியவர்களும் மறைந்து  பல  அவசரக் குடுக்கைகள் மேலே வந்து விட்டனரா?

பணம் பணம் என்று பறந்து  பிள்ளையை அமேரிக்கா அனுப்புவதில் குறியாக இருக்கும் வைதிகர்கள் தா ங்கள் தடம்  மாறியதை  பார்க்கிறார்களா இல்லையா? நாங்கள்  பார்க்கிறோம். பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறோம்.

எல்லா மடா திபதிகளும்  சொல்வது " தர் மோ  ர க்ஷதி   ரக்ஷக: " என்பது. ஆனால் தங்கள் தர்மத்தை காற்றில் விட்ட இந்த புரோகிதர்களை யாரும் ஒன்றும் சொல்வதில்லை . ஊ ருக்கிளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல எல்லோரும் ஒன்று போல பணம் கொடுக்கும் கிரஹஸ்தர்களை குற்றம் சொல்வார்கள். இது என்ன நியாயம் என்று நாங்கள்  கேட்கிறோம்.

பணத்தையும் குறியாக வாங்கிக்கொண்டு வேறு எதையும்  பொருட்படுத்தாமல்  " தாதாக்கள் " போல  செயல் படும் இவர்களை எங்களால் ஒரு கேள்வி கேட்க  முடியாது.ஆனால், சங்கராச்சார்யர்களும்,  ஆதினங்களும், பிராமண சங்கங்களும் , டிரஸ்டுகளும் எங்கள் சார்பில் இந்த புரோகிதர்களை  ந ல்   வழிப்படுத்தக்கூடாதா?

 இல்லையெனில், அடுத்த  தலை முறை இந்த வேத வழி  பூஜை புனஸ்காரங்களை ஒதுக்கி  விடுமோ என்ற அச்சம் எல்லா கிருகஸ்தர்கள் மனத்திலும் எழுவது உண்மை.


நமஸ்காரம்.


No comments: