Tuesday, January 3, 2017

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-15

குறள் 274:  அதிகாரம் 28 கூடாவொழுக்கம்


தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
பொருள் : தவக்கோலத்தில் இருந்து கொண்டு அதற்கு மாறாக தீய செயல்களில் ஈடுபடுதல் ஒரு வேடன் மறைந்திருந்து பறவைகளை ப்பிடிப்பது போன்றது.
இந்த குறள் திருவள்ளுவர் எழுதியபோது ராவணனைத்தவிர வேறு யாரை நினைத்திருப்பார்?
மாரீசனை அனுப்பி ராமரையும் லக்ஷ்மணனையும் சீதையிடமிருந்து பிரித்து அவளை பாதுகாப்பில்லாமல் செய்த பின்னர். தவ வேடம் பூண்டு பர்ணசாலைக்கருகில் ராவணன் வரும் காட்சியை கம்பர் வருணிக்கிறார்.


தாமரை மணிதொடர்
தவத்தின் மாலையன்,
ஆமையின் இருக்கையன்,
வளைந்த ஆக்கையன்,
நாம நூல் மார்பினன்,


தாமரை மணிகளால் ஆன ஜப மாலை அணிந்து கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிய ஆமை போல நடித்து க்கொண்டு, முதியவன் போல உடல் கூனிக்கொண்டு  இறைவன் நாமத்தை சொல்லவே அணியப்படும் பூணூல் அணிந்து கொண்டு வருகிறான். (ராவணன் ஒரு இளம் சன்யாசி என்று சினிமாக்களில் காட்டுவது பிழை. அவன் ஒரு முதிய சிவனடியார் போல வருகிறான். சன்யாசியாய் அல்ல​.இதை என்னைப்போல் படிக்காதவன் சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள். தவறாகவே எல்லாவற்றையும் புரிந்து கொண்டு தன்னம்பிக்கையோடிருப்பவர்  மிக அதிகம் பேர்).  அவன் வேடத்தை க்கண்டு தேவரே நம்பி விட்டனர் என்றால் சீதை நம்பாமல் என்ன செய்வாள் ? “ இங்கு யார் யார் இருக்கிறீர்கள்” என்று கேட்க முனைகிறான். ஆனால் கலை மகள் சினந்ததால் அவன் நாக்குழறுகிறது. ஆனால், விதியின் வசப்பட்டு, அதை சீதை கவனிக்க தவறி விட்டாள். முதியவர், அடியார், முனிவர் என நம்பி அவனை உள்ளே வரச்சொல்லி இருக்கையில் அமர சொல்கிறாள்.
அவள் அழகை பார்த்த ராவண முதியவருக்கு மனம் தடுமாறுகிறது. வேடன் வலையை விரிப்பது போல் “நான் இலங்கைக்கு சென்றிருக்கிறேன். ஆஹா !! எத்தனை அழகான ஊர்? அந்த ஊர் அரசன் ராவணன் “வெம்மை தீர் ஒழுக்கினன், விரிந்த கேள்வியோன், செம்மையோன். மன்மதன் திகைக்கும் செவ்வியன்” . ஆனால் என்ன செய்ய? அவனுக்கு பிடித்த பெண் எங்கேயும் கிடைக்கவில்லையே? என்று வலையை வீசி பார்க்கிறான். சீதையோ “ எப்படி ஒரு தவ முனிவர் அரக்கர் கோனை ஆதரித்து பேசுகிறீர்கள்?” “அற நெறி நினைக்கிலாதவர் இனத்திடை வைகினீர். என்செய்தீர்?” என்று கடிந்ததோடு அது போன்ற அரக்கரை ராமர் கொன்றதையும் பெருமையாக க்கூறுகிறாள். “மானுடர் வலியர்” என்று அவள் சொன்னதும் போலி அடியாரின் வேடம் கலைகிறது.   
“தீ விடத்து அரவம் தானே உருகெழு சீற்றம் பொங்கி பணம் விரித்தது உயர்ந்தது ஒத்தான்” அதாவது படம் எடுத்து ஆடும் கொடிய விடப் பாம்பு போல எழுந்தான் ராவணன். (படுத்திருக்கும் பாம்புக்கும் தலையைத்தூக்கி படம் எடுத்து நிற்கும்
பாம்புக்கும் நிறைய வேறுபாடு உள்ளது) அந்த க்கோபத்தில் “உன்னை கடித்துத் த்தின்னுவேன்” என்று கத்தினான். பிறகு தரையை பெயர்த்து எடுத்து தேரில் வைத்து சென்றான்.

ஒரு வேடன் எப்படி பொறுமையாய் வலை விரித்து புதரில் காத்திருப்பான் என்பதற்கு ராவண முதியவர் ஒரு உதாரணம். பறவை வலையில் விழுந்த பிறகு எப்படி அவன் தன் மறைவிடத்திலிருந்து எழுந்து வெடுக்கென அதை பிடித்து செல்வானோ அப்படி த்தான் ராவணன் தன் வேடத்தை க்கலைத்து பிராட்டியாரை தேர் மேல் எடுத்து சென்றான்.

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-13

குறள் 341 அதிகாரம் 35 துறவு


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
பொருள் : எதனின்றும் நீ விடுபட்டிருக்கிறாயோ அதனால் உனக்கு துயர் இல்லை. (யாதனின், எதனின் என்று இரு முறை வருவது அழுத்தமாக கருத்தை தெரிவிக்கிறது).


நம் துயர் எதனால் என்று பார்த்தோமானால்,  நாம் எதனிடம் ஈடு பட்டிருக்கிறோமோ, அதன் விளைவால் தான் என்பது தெரிய வரும். அது வீடாக இருக்கலாம். நிலமாக இருக்கலாம். பதவியாக இருக்கலாம்.  காதலியாக இருக்கலாம். ஏன், ஒரு ரசகுல்லாவாகக்கூட இருக்கலாம். ஒரு ஆங்கிலேய எழுத்தாளர் சொன்னது போல் “முதலில் செல்வத்தை நீ ஆள்கிறாய். பிறகு அது உன்னை ஆள்கிறது”. எவ்வளவு உண்மை?


இதனை ஒரு கதை மூலம் புரிந்து கொள்ளலாம். முன்னொருகாலம் இன்னாட்டை பரதர் என்ற ஒரு அரசர் ஆண்டு வந்தார். (ராமர் தம்பி இல்லை). வயதான உடன், அந்த கால வழக்கப்படி, தன் பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு காட்டுக்கு புறப்பட தயார் ஆனார். யோஜித்தார். அரசு பதவி தானே ? அது என்ன பெரிய விஷயம்? பிள்ளைக்குக் கொடுத்தார். அரண்மனை அதன் வசதியான வாழ்வு? அதிலெதற்கு நமக்கு பற்று? விட்டுவிட்டார்.  யானை, குதிரை, ரதம், மெய்க்காவல் எல்லாவற்றையும் இது எதற்கு? இது எதற்கு? என்று கேட்டு பொருளால் மட்டும் அல்ல  மனத்தாலும் துறந்தார். திருவள்ளுவர் சொன்னது போல் யாது? யாது? என்று கேட்டு ஒவ்வொன்றையும் விட்டு விட்டார் ! கானகம் சென்றார். தனக்கென ஒரு குடிலை அமைத்துக்கொண்டார். தினமும் மெய்ப்பொருள் பற்றி தவத்தில் ஈடுபட்டார். அவர்க்கென்று அப்போது எதுவும் இல்லை. அருகில் உள்ள நதியில் ஸ்னானம் செய்யவேண்டியது. பரம்பொருளை நினைத்து இடைவிடாத த்யானம் பண்ணுவது. இடையில் கையில் கிடைத்த கனி கிழங்கை புசிப்பது. இது தான் அவர் தினசரி வாழ்க்கை. எதிலும் பற்றில்லை. ஆதலால், எதனாலும் துயரில்லை. இப்படி ஆண்டுகள் உருண்டோடின. ஒரு மஹரிஷியாகவே ஆகிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அப்போது இறைவன் தன் திருவிளையாடலை துவக்கினான்.
ஒரு நாள் நதியில் குளிக்க வந்தார். மான் ஒன்று தண்ணிர் குடித்து க்கொண்டிருந்தது. தூரத்திலிருந்து சிங்கம்  ஒன்று கர்ஜிக்கும் சத்தம் கேட்டது. அச்சமுற்ற மான் பயந்து போய் ஒரே தாவில் நதியை க்கடந்து செல்ல எண்ணி தாவிற்று. அது ஒரு பெண்மான். கருவுற்றிருந்த நிலை. பூரண கர்ப்பம். தாவும்போது கருவை ஈன்றது. அந்த வலியிலேயே உயிர் துடித்து நதியில் விழுந்து இறந்தது. குட்டியோ நதியில் விழுந்து தத்தளித்தது. நதி அதை அடித்து சென்றது.குளிக்க வந்த பரதர் அந்த மான் குட்டியை ப்பார்த்து பரிதவித்தார். ஒரு அரசனாயிருந்து பல்லாயிரக்கணக்கான குடிமக்களை க்காத்தவர் அல்லவா? அவருக்கு கருணை பிறந்தது. நீந்தி சென்று அந்த மான் குட்டியை தன் கையில் ஏந்தி காப்பாற்றினார். அதை தன் குடிலுக்கு எடுத்து வந்தார். உலர்ந்த புல் படுக்கையில் அதை படுக்க வைத்தார்.  சிறந்த கனிகளை பறித்து வந்து தந்தார். நாளடைவில் அவர் பராமரிப்பில், அந்த குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்தது. குடிலில் அது துள்ளி க்குதித்து விளையாடியது. அதைப்பார்த்துக்கொண்டிருப்பதே பரதருக்கு மனோரஞ்சகமாக இருந்தது.  நாள் ஓடுகிறது. பகவத் த்யானத்துக்கு நேரமே கிடைக்கவில்லை. சிறிது நேரம் த்யானத்தில் அமர்வதற்குள், ஐயையோ மானுக்கு உணவு வேண்டுமே ? என்று யோஜனை வந்து விடும். இல்லையென்றால், அது எங்கு ஓடி விட்டதோ என்று பதட்டப்படுவார். அது சில நாள் வெளியில் மேயப்போனால் கூட கவலையோடு உட்கார்ந்திருப்பார். ஏதாவது சிங்கம், புலி கொன்றிருக்குமோ? என்று மனம் அடித்துக்கொள்ளும். அது வந்த பிறகு தான் அவருக்கு நிம்மதி வரும். இரவு ஆனால், குடிலுக்குள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் உறங்கியவர் ஒரு கதவு செய்து அதை சாத்திக்கொண்டார். இரவில் ஓனாய், நரி, வருமோ என்ற பயம். அவருக்கும் முதுமை வந்தது. வாழ்னாள் முடியும் தருணம். எல்லாவற்றையும் விட்டவர் ஆயிற்றே ! பிள்ளை , குட்டி , மனைவி நினைவு கூட வரவில்லை.ஆனால், கடைசி முறையாக தான் வளர்த்த மானை ப்பார்க்கத்துடித்தார். மனம் இறைவன் பால் செல்லவில்லை. மானின் நினைவாகவே அவர் உயிர் பிரிந்தது. பல வருடங்கள் தவம் செய்தவர் சாகும் வேளை இறைவனின் நினைவு வராமல் ஒரு மானை நினைத்து இறந்தார். அதனால்தானோ என்னவோ,அடுத்த பிறவி மானாகவே பிறந்தார். அந்த பிறவியில் துயரம் பல. அப்பிறவி முடிந்து, அதற்கடுத்த பிறவியில் ஒரு குடும்பத்தில் கடைசி மகனாக ப்பிறந்தார்.  மூடன் என்ற பெயர் வாங்கினார். எல்லோரும் அவரை கருணையின்றி வேலை வாங்கினர். அவருக்கு பேச்சு கூட சரியாக வராது. உடல் மட்டும் வஞ்சனையின்றி வளர்ந்திருந்தது. ஒரு நாள் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவர் ஆழ்மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள். எதிலும் பிடிப்பில்லை என்பதை உணர்ந்தார். வீடு கூட இல்லை. அண்ணன்மார் தகப்பனார் சொத்தை சுருட்டிக்கொண்டனர். அண்ணிகள் வீட்டு வேலைக்கு அவரை பயன் படுத்தினர். எதற்காக பிறந்தோம் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது ஒரு பல்லக்கு வந்தது. ஒரு அரசன் அமர்ந்து வந்து கொண்டிருந்தான். பல்லக்கு தூக்கி வந்தவர்களில் ஒருவன் உடல் நலம் இல்லாமல் விழுந்து விடவே படை த்தலைவன் பல்லக்கை நிறுத்தினான். அவன் கண்ணில் நல்ல உடல் வாகோடு மரத்தடியில் அமர்ந்திருந்த பரதர் பட்டார். (போன ஜென்மத்துப்பெயரே இருக்கட்டும்) “அட, இவனைக்கூப்பிடலாமே” என்று அவரிடம் சென்று “டேய்!! பல்லக்கு சுமக்க வருகிறாயா?, நல்ல சோறு கிடைக்கும்” என்றார். பரதர் தன் மனத்தில் ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த படியால் பதில் கூறவில்லை. தளபதி அவரை வலுக்கட்டாயமாய் இழுத்து க்கொண்டு வந்து பல்லக்கின் கழியை அவர் தோளில் வைத்தார். பல்லக்கு புறப்பட்டது. பரதர் சென்ற ஜென்ம நல்வினைகளின் பயனாக ஒரு குணம் கொண்டிருந்தார். அது தான் ஜீவகாருண்யம். மறந்தும் அவர் ஒரு ஜீவனை யும் கொல்லமாட்டார். இன்றைக்கு பல்லக்கு சுமக்க ஆரம்பித்தவுடன் அவர் பாடு பொல்லாப்பாடாகி விட்டது. காலின் அருகில் ஊரும் ஒரு எறும்பை ப்பார்ப்பார். ஐயையோ என்று உடனே ஒரு தாவு தாவுவார். பல்லக்கு இரண்டு அடி செல்லும். வழியில் ஒரு தவளையை ப்பார்த்தால் உடனே அதை காப்பாற்ற ஒரு பக்கம் சாய்வார். இப்படி அவர் வளைந்து நெளிந்து தாவி குதித்து சென்றால் மேலே உட்கார்ந்திருக்கும் அரசனுக்கு எப்படி இருக்கும்? அவன் தன் தலையை வெளியே நீட்டி “ அட முட்டாளே !! என்ன ஆயிற்று உனக்கு? தோள் வலித்ததென்றால் பல்லக்கை நிறுத்துகிறேன். சற்று உட்கார்ந்து இளைப்பாறித் தொலையேன்” என்று கத்தினான். இறைவன் பார்த்தான். எந்த ப்பற்றை விட்டாலும் ஒரு மான் குட்டியால் தானே துயர் உற்றார். ஆனால், இந்த அளவு அவருக்கு ஜீவகாருண்யம் உள்ளதே !! ஜீவகாருண்யம் என்பது “பற்றற்றான்” என்று திருவள்ளுவர் சொன்ன இறைவனுக்கே உள்ள பற்றல்லவா? ஆதலால், இனியும் பரதரை சோதிக்கக்கூடாதென்று அவருக்கு உடனே ஞானத்தையும்  தந்தருளினான். ஞானம் பிறந்த பரதர் அப்போது அந்த ப்பிறவியில் முதன் முறையாக தெளிவாக ப்பேசினார் “ அரசரே!! யாரை முட்டாள் என்றீர்கள் ? பல்லக்கை சுமக்கும் நானா? உட்கார்ந்திருக்கும் நீங்களா? நாம் இருவரும் ஒரே பொருளால் உண்டானவர்கள். ஆகவே முட்டாள் என்றால் என் பார்வையில் நாம் இருவரும் தான். நீ மேலே உட்கார்ந்து பேசுகிறாய். இறங்கி கொஞ்சம் கீழே பார். இந்த பாதையில் நீ பார்க்காத வகையில் ஊர்கின்ற தவளையும், எறும்பும், அணிலும், பாம்பும், புழுவும், கூட நம்மினும் வேறுபட்டவர் அல்லரே !!. அவர்களையும் தான் நான் எனக்கு சமமாக மதிக்கிறேன். உனக்காக, அவர்களை மிதித்துக்கொன்று நான் எப்படி செல்ல முடியும்? நீ ஒரு உயிர் மகிழ்ந்திருக்க நான் மதிக்கும் இன்னொரு உயிரை நான் எப்படி கொல்வேன்? அது ஒதுங்க மாட்டேன் என்கிறது. ஆகவே தான் நான் அதன் பாதையிலிருந்து ஒதுங்கி ஒதுங்கி செல்கிறேன். உன் பல்லக்கும் ஆடி ஆடி செல்கிறது. ” என்று பதில் இறுத்தார். அரசன் இது ஒரு பல்லக்கு தூக்கும் ஆள் அல்ல நாம் தவறு செய்திருக்கிறோம் என்று புரிந்து கொண்டு பல்லக்கை நிறுத்த சொன்னான். உடனே கீழே குதித்து அவரை அமர சொல்லி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வணங்கினான். ஆனால், பரதர் அத்தருணம் பேசவில்லை. எப்படி பேசுவார்? இறைவன் அவர் படும் துயரை நீக்கி தன்னோடு சேர்த்துக்கொண்டு விட்டான்.  

அவர் மட்டும் அன்று மான் மீது பற்று வைக்காமல் இருந்திருந்தால் செய்த தவத்துக்கு, இந்ததுயர்கள் கூட  இல்லாமல் என்றோ பரமன் திருவடியில் கலந்திருப்பாரே !! திருவள்ளுவர் சொன்னது இதுதானே யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.  

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-12

குறள் எண் 249 அதிகாரம் 25 அருளுடைமை  


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.


பொருள் அறிவில் தெளிவில்லாதவன் ஒரு நூலின் மெய்ப்பொருள் உணர்ந்தது போல த்தான் அகத்தில் அருள் இல்லாதவன் செய்யும் அறமும் இருக்கும். (இரண்டும் அரை குறைதான்)


தெளிவில்லாதவன் நூல்கள் படிப்பான். படித்ததை விளக்க முற்படுவான். ஆனால் அதில் அவனுக்கும் ஒரு பயனும் இருக்காது. கேட்கிறவர்களுக்கும் இருக்காது. திருவள்ளுவர் இந்த உதாரணத்தை எடுத்து க்கொண்டு மனத்துக்கண் அருள் இல்லாதவன் அறம் செய்வது வீண் என்ற விஷயத்தை விளக்குகிறார். நாம் எல்லோரும் என்ன நினைப்போம்? அறம் செய்வது மிக எளிது என்று தானே !!  என்ன ஏழைக்கு உதவி, சிறிது பணம், துணிமணி அதுதானே? என்று எண்ணி அதை செய்த பின் ஆஹா !! நாம் எவ்வளவு பெரிய தர்ம வான் கள் என்று மகிழ்ச்சியாக இருப்போம் இல்லையா?  அப்போது, இந்த வள்ளுவப்பெருமான் மனத்தில் அருள் இல்லாமல் அறம் செய்தால் அது ஆரவாரத்தன்மை உடையது. ஆகவே, நீ அறம் செய்தென்ன செய்யாமல் இருந்தென்ன ? என்று கேட்பார். இதை விட வலிமையான கருத்தை ஆணித்தரமாக யாரும் எந்த சாத்திரத்திலும் சொன்னது கிடையாது. ஆனால், தெய்வப்புலவர் திருவள்ளுவர் யாரும் சொல்லாததை இவ்வளவு அனாயாசமாக சொல்கிறார். வெள்ள நிவாரணம் தானே. 1000 ரூபாய் கொடுத்துவிட்டேன். அனாதை ஆசிரமம் தானே இன்று  500 ரூபாய்  அனுப்பி விட்டேன். அடாடா !! நான் அறம் செய்து வாழ்பவன் என்றால் ஊர் உலகம் ஒத்துக்கொள்ளும். உங்கள் மதம் ஒத்துக்கொள்ளும். உங்கள் மனைவி ஒத்துக்கொள்வாள். ஆனால் , திருவள்ளுவர் ஐயா ஒத்துக் கொள்ளமாட்டார். “ மகனே,உண்மையை சொல். நீ என்ன உன்னிடம் அருள் சுரந்ததால் அறம் செய்தாயா?”  என்று கேட்பார். அதென்ன அருள் சுரப்பது? அது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்காகவோ இல்லை வேறு ஒரு உயிரினத்துக்காகவோ இதய பூர்வமாக அதன் வலியை உணர்ந்து அதை சிறிதாவது நீக்க தன்னால் அதிக பட்சம் என்ன முடியுமோ அதை செய்ய வேண்டும் அது அறம். சிபி சக்ரவர்த்தி ஒரு புறாவுக்காக தன் உடலை வெட்டி துண்டு போட முயன்றானே அது ஒரு அருளினால் விளைந்த அறம். அதைத்தான் அறம் என்று வள்ளுவர் ஒப்புக்கொள்வார். மற்றவையை தள்ளிவிடுவார். இதற்கு விளக்கமாக ஒரு கதை மஹாபாரதத்தில் வருகிறது. தர்ம புத்திரர் ராஜசூய யாகம் செய்தார். க்ருஷ்ணனுக்கு முதல் மரியாதை. (ஒரு இடைச்சிறுவனுக்கு இவ்வளவு மரியாதையா என்று சிலர் எதிர்த்தது வேறு கதை) பின்னர் மற்ற எல்லோருக்கும் கை நிறைய பொன்னும் பொருளும் போதும் என்று சொல்லும் வரை தானம் கொடுத்தார். எல்லோரும் அவரை தர்மராஜா தர்ம தேவதை என்று வாழ்த்தி செல்கிறார்கள். எல்லோரும் போன பின், அப்போது அங்கு ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் பாதி முதுகு தங்க நிறமாக ஜொலிக்கிறது. வந்தவுடன் அந்த தானம் செய்த இடத்தில் விழுந்து விழுந்து புரண்டது. யாருக்கும் அது என்ன செய்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. பிறகு ஒரு முறை தன் முதுகை திருப்பி திருப்பி ப்பார்த்துக் கொண்டது. பிறகு தர்மரிடம் வந்தது “ யோவ்! அரசரே !! என்ன தர்மம் பண்ணினீரோ? ஒன்றுக்கும் உபயோகம் இல்லை” என்று கோபத்துடன் சொன்னது. அது சொல்வதை க்கேட்டு அதிர்ச்சியடைந்த தருமர் அதை க்கூப்பிட்டு “ அதென்ன,இப்படி சொல்கிறாய்? இவ்வளவு தானம் செய்துள்ளேன். வந்தவர் எல்லோரும் பாராட்டி சென்றனர். நீ சொல்வதோ அதற்கு மாறாக இருக்கிறது. அப்போது, தருமத்துக்கு உன் அளவுகோல் தான் என்ன?” என்று கேட்டார்.
கீரிப்பிள்ளை சொன்னது. “ அப்படிக்கேளுங்கள், சொல்கிறேன். முன்னொரு காலத்தில் நான் ஒரு காட்டில் தனியாக வசித்து வந்தேன். நான் இருந்த பொந்துக்கு அருகே ஒரு ஏழை க்குடும்பம் வாழ்ந்து வந்தது. அவர்களுக்கு தினம் சாப்பிட வழியில்லை. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் உணவே உண்பார்கள். அதுவும் காட்டில் பொறுக்கிய தானியங்களை அரைத்து மாவு போல் செய்து அந்த இல்லத்தரசி செய்து நாலு பங்கு போடுவாள். அதை அவள் கணவர்,அவள் இரண்டு பிள்ளைகள் எல்லோரும் உண்பார்கள். ஒரு நாள் அது போல அவள் பொறுக்கி சேர்த்த தானியங்களை மாவாக அரைத்து வைத்தாள். அப்போது பார்த்து, எங்கிருந்தோ ஒரு ஏழை வந்து “பசி உயிர் போகிறது. எனக்கு உடனே ஏதாவது சாப்பிடக்கொடுங்கள். இல்லையென்றால் என் உயிர் போய்விடும்.” என்று கேட்டான். நான் என் பொந்துக்கு வெளியே வந்து மறைவாய் உட்கார்ந்து பார்த்தேன். பாவம், இவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு சங்கடமாயிருந்தது. முதலில் கணவர் சொன்னார், “ குழந்தைகளா, நமக்கு தெரியும். பசியின் கொடுமை பற்றி. இவன் பாவம். அதே கஷ்டத்தை படுகிறான். என்னால் தாங்க முடியவில்லை. நான் என் பங்கை அவனுக்குக் கொடுக்கிறேன் “ என்று கொடுத்தார்.  அந்த ஏழை அதை வாங்கி சாப்பிட்டான். பிறகு சொன்னான் “ ஐயா, நீர் கொடுத்த மாவு ருசியாக இருக்கிறது. ஆனால், என் பசி தீரவில்லை. இன்னும் கொஞ்சம் கொடுக்க முடியுமா?” என்றான். “ஐயோ, இவன் பாடு நம்மை விட பரிதாபம் போலும். நாமாவது பசியாயிருந்து பழக்கப்பட்டு விட்டோம். என் பங்கு மாவை அவனுக்கு கொடுங்கள். நான் இன்று தண்ணீர் குடிக்கிறேன்” என்று சொல்லி மனைவி தன் பங்கை அந்த ஏழைக்கு க் கொடுத்தாள். ஏழை சொன்னான் “ அம்மா, நீங்கள் சாக்ஷாத் தேவி தான். ஆனால், நான் ஒரு பாவி. எனக்கு இதுவும் போதவில்லை. இன்னம் கொஞ்சம் கொடுக்க முடியுமா?” என்றான். மனைவியும் பரிதாபப்பட்டு தன் குழந்தைகளிடம் “ என் கண்மணிகளா!! நாளைக்கு நான் மாவு தருகிறேன். இப்ப அந்த மாமாவுக்கு நீங்க கொடுப்பீங்களாம்” என்று இதமாக பேசி  அவர்களிடம் மாவை வாங்கி அந்த ஏழைக்கு கொடுத்தாள். நான் இந்த மாதிரி மனிதர்களை பார்த்ததே இல்லையா. என்னடா இது ? என்று அயர்ந்து போய் பார்த்தேனா? அப்போது மாவைக்கையில் வாங்கிய உடனே அந்த ஏழை திடீரென்று மறைந்து அந்த இடத்தில் தர்ம தேவதை தன் சுயமான உருவத்தை அவர்களுக்கு காட்டி நின்றது. அந்த ஒளிமயமான உருவத்தை நானும் பார்த்தேன். அவர்கள் வியப்படைந்து நின்றார்கள். உடனே , தர்ம தேவதை “ உங்கள் தர்ம சிந்தனையை மெச்சினேன். நீங்கள் என்னுடன் வாருங்கள் ” என்று கூறி அவர்களை புஷ்பக விமானத்தில் சுவர்க்கத்துக்கு அழைத்து சென்றது. ஒரே ஒரு கணம்தான். அப்புறம் அங்கு யாரையும் காணோம். அந்த ஏழை உருவில் வந்த தர்ம தேவதை சாப்பிட்டு மிச்சம் கீழே சிந்தியிருந்த மாவு தான் இருந்தது. என்ன தோன்றியதோ கீரிப்பிள்ளைகளுக்கே உள்ள குணத்தினால் உந்தப்பட்டு, நான் அந்த மாவு துகள் மேல் படுத்து உருண்டேன். பார்த்தால், என்னுடைய பாதி முதுகு தங்கமாகி விட்டது. தரையில் மாவு துகள் சுத்தமாக இல்லை. இன்னொரு பாதி முதுகு தங்கமாக வேண்டுமே? இல்லையெனில் சிரிப்பார்களே, அதனால் நானும் அன்றிலிருந்து எங்கெல்லாம் தனவந்தர் தானம் தருமம் செய்கிறார்களொ அங்கெல்லாம் போய் உருளுவேன். மீதி முதுகு தங்கமாகிறதா என்று பார்ப்பேன். ஆகவில்லையே. இவ்வளவு பெரிய உலகத்தில் யாரும் அந்த குடும்பத்துக்கு ஈடாக தர்மம் செய்யவில்லை போலிருக்கிறது. அதனால், என் பாதி முதுகு இன்று வரை தங்கமாகவில்லை. வயசும் ஆகி விட்டதா? மனத்தில் விரக்தியோடு ஊர் ஊராக சுற்றி வருகிறேன். வீடு வீடாக உருளுகிறேன். இன்று இந்த ஊருக்கு வந்தேனா !! என்னவோ இந்த ஊர் முழுக்க எல்லோரும் சொன்னார்கள் “ யாரோ தருமபுத்திரராம். அவர் தர்மமே உருவானவராம். அவர் தானம் செய்கிறார் என்று.”  சரி என்று முழு நம்பிக்கையோடு வந்தேன். இங்கும் என் முதுகு தேய உருண்டது தான் மிச்சம். நீங்களே பாருங்கள். என் பாதி முதுகு தங்கமாகியிருக்கிறதா? இல்லையே. இதன் பொருள் என்ன? அன்றைக்கு அந்த அந்த ஏழை க்குடும்பம் செய்த தருமத்துக்கு, ராஜாவான நீங்கள் செய்த தானம் எல்லாம் சேர்த்தும் ஈடாகவில்லை. நீங்கள் நல்ல பெயர் வேண்டும் என்று ஆரவாரத்துக்காக செய்திருக்கிறீர்கள். அருளினால் அல்ல. என்னவோ செய்யுங்கள். நான் வருகிறேன்” என்று சொல்லி விட்டு சென்று விட்டது. தர்மர் தலை குனிந்தார்.
தர்மருக்கே இந்த கதி யென்றால் நம் கதி என்னவோ? அருளாதான் செய்த அறம் தான். வள்ளுவரே ! எம் தலைக்கனத்தை எல்லாம் இப்படி ஒரு வரியில் அழித்து விட்டீரே ஐயா!!   எமக்கு என்று அருள் வருவது? என்று அறம் செய்வது?         

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்- 5

குறள் 76: அதிகாரம்: அன்புடைமை


அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

பொருள் : அறச்செயல்களுக்கு மட்டும் அன்பு துணையாக இருக்கும் என்று அறியாதவர் சொல்வார்கள். ஆனால், மற்றவர்களோடு போர் புரிவதற்கு க்கூட அன்பு தான் காரணமாக இருக்கிறது.

இதென்ன இப்படி சொல்லுகிறார் வள்ளுவர்? போர் புரிய அன்பு காரணமாக இருக்குமா ? இப்படி ஒரு போர் நடந்திருக்கிறதா ?  ஆம். நடந்திருக்கிறது. மஹா பாரத காலம்.கண்ண பிரான் துவாரகையில் அரசராய் இருந்த நாட்கள். அப்போது ஒரு சிற்றரசராய் இருந்த சத்திராஜித் என்பவனுக்கு சூரிய தேவனிடமிருந்து ஒரு மணி கிடைத்தது. அதன் பெயர் சியமந்தக மணி. அதனை பெருமையாக அணிந்திருப்பான் சத்திராஜித். அது தினம் தேவையான அளவு தங்கம் தரும் ஒரு அதிசயமணி. அதை க்ருஷ்ணருக்கு கூட காட்டாமல் அவன் வைத்திருந்தான். ஒரு நாள் அவன் தம்பி பிரசேனன் மிக ஆசைப்பட்டு அதை  கேட்டு வாங்கி அணிந்து கொண்டு வேட்டைக்கு போனான். திரும்பி வரவில்லை. சத்திராஜித்துக்கு கண்ணன் மேல் சந்தேகம் வந்தது. மணிக்கு ஆசைப்பட்டு ப்ரசேனனைக்கொன்றிருப்பான் கண்ணன் என்று அபாண்டமாக பழி போடவே கண்ணன் ப்ரசேனனைத்தேடி காட்டுக்குள் சென்றார்.  அங்கு ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்ட ப்ரசேனனின் உடலை க்கண்டார். மேலும் காட்டுக்குள் சென்றார். அந்த சிங்கமும் ஏதோ ஒரு சண்டையில் அடிபட்டு உயிரிழந்திருப்பதை பார்த்தார். அவருக்கு பெரு வியப்பு ஏற்பட்டது. என்ன அதிசயம்? ஒரு சிங்கத்தை போரில் வென்று கொல்லும் மிருகம் எதுவாக இருக்கும்? என்று மேலும் காட்டுக்குள் சென்றார். அங்கு ஒரு குகை காணப்பட்டது. அதனுள் ஒரு பெண் ஒரு குழந்தையை தாலாட்டி கொண்டிருந்தாள். தொட்டிலுக்கு மேலே அவர் எந்த மணியை த்தேடி வந்தாரோ அது குழந்தைக்கு விளையாட்டு காட்ட ஒரு பொருளாக தொங்க்க விடப்பட்டிருந்தது. இன்னமும் அதிசயம் அடைந்த கண்ணன் சற்று ஒளிந்திருந்து பார்த்தார். சிறிது நேரம் சென்றவுடன், குகைக்குள் ஒருவர் நுழைந்தார். அவர் வேறு யாருமல்ல. ஜாம்பவான் தான். ஒரு புறம் கண்ணனுக்கு பெருத்த மகிழ்ச்சி. தான் ராமராக அவதாரம் செய்த போது ஜாம்பவான் எத்தனை பெரிய உதவி செய்திருக்கிறார்? வானர சேனைக்கே தலைமை ஏற்று நடத்தியவராயிற்றே? ஓடி சென்று ஆர தழுவிக்கொள்ள வேண்டும் என்று தோன்றிற்று கண்ணனுக்கு. தன்னை சற்று கட்டுப்படுத்திக்கொண்டார். அவர்தான் இப்போது ராமர் இல்லையே! க்ருஷ்ணர் அல்லவா ! அதுவும் இப்போது மணியை த்தேடியல்லவா வந்திருக்கிறார்! அதை மறந்துவிடக்கூடாதே !!
தான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்து “ ஏய்!! கிழக்கரடியே!! எங்கள் இளவரசனை க்கொன்று  அவர் அணிந்திருந்த மணியை அபகரித்து வந்தால் நாங்கள் விட்டு விடுவோமா !! மரியாதையாக க்கொடு மணியை !! என்று பொய்க்கோபத்துடன் அதட்டல் போட்டார். ஜாம்பவானுக்கு வந்திருப்பது யாரென்று தெரியாததால் “ அடேய் !! உனக்காவது மணியை நான் கொடுப்பதாவது !! முடியுமானால் வா வந்து என்னொடு சண்டை போட்டு என்னை தோற்கடி. பிறகு மணியை பற்றி நினை” என்றார். கண்ணபிரானுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சண்டை என்ற சாக்கினில் தனது பழைய நண்பர் ஜாம்பவானோடு பொருதினார். நெஞ்சோடு கட்டி த்தழுவினார். சண்டை என்ற பெயரில் இரண்டு குத்து குத்தினார். தானும் இரண்டு வாங்க்கி க்கொண்டார். இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை. நேரம் ஆக ஆக ஜாம்பவானுக்கு ஐயம் தோன்ற ஆரம்பித்தது. என்ன அதிசயம் ! நம்மை இத்தனை நேரம் சமாளிக்க இவ்வளவு வலிமை இந்த மனிதனுக்கு எங்கிருந்து வந்தது !! இவனைப்போல் ஒருவனை நாம்  பார்த்ததே இல்லையே என்று யோஜித்தவுடன் அவருக்கு தெரிந்து விட்டது வந்திருப்பது சாக்ஷாத் நாராயணன் என்பது. பிறகு அவர் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கேட்டு பின்னர் மணியையும் தந்து தன் பெண் ஜாம்பவதியையும் திருமணம் செய்துவைத்தார். இந்த க்கதையில் கண்ணன் தன் அன்பின் வெளிப்பாடாகவே ஒரு போர் செய்தார் அல்லவா !! அதே கருத்து தான் இக்குறளில் வெளிப்படுகிறது. .

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்- 4

குறள் 72 அதிகாரம் அன்புடைமை


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.


பொருள்: அன்பில்லாதவர்கள் எல்லாவற்றையும் தனதென்றே நினைப்பார்கள். அன்புடையவர்கள் தன் எலும்பைக்கூட பிறர்க்காக கொடுப்பார்கள்.


அது சரி, உண்மையிலேயே அன்பு மிகுதியால் யாராவது தன் எலும்பை க்கொடுத்திருக்கிறார்களா இல்லை கவிதையில் எதுகை, மோனைக்காக அன்பு, என்பு என்று வள்ளுவப்பெருமான் எழுதி விட்டாரா ? இல்லை, எலும்பை ஒருவர் கொடுத்திருக்கிறார்.


இதற்கொரு கதை இருக்கிறதே !!!!

முன்னொரு காலத்தில் அசுரர் சர்வ வல்லமையும் பெற்று திகழ்ந்தனர். தேவர்களை படாத பாடு படுத்தினர். தேவர்கள் ஓடி ஒளிந்தனர். பரமனும் அவர்களை கண்டு கொள்ளவில்லை. அவன் தான் வேண்டுதல் வேண்டாமை இலான் ஆயிற்றே ! நீங்களே பார்த்து க்கொள்ளுங்கள் என்று சும்மா இருந்து விட்டான். தேவர்களிடம் இருந்த ஆயுதங்கள் உபயோகமில்லாதவை. 1962 ல் சீனப்போரில் நாம் எந்த நிலையில் இருந்தோமோ அந்த நிலையில் இருந்தார்கள். அசுரர்களை எதிர்க்க முடியாத நிலை. அதிலும் அசுரர் தலைவன் விரித்திராசுரனை ஜெயிக்க ஆயுதம் இல்லாமல் எப்படி முடியும் ? அவர்களுக்கு தேவை a deadly weapon. தேவர் கவலையில் ஆழ்ந்திருந்த போது, அப்போது ததீசி என்ற முனிவர் வந்தார். பல வருடங்கள் தவம் செய்து மிக வலிமையான உடல் பெற்றிருந்தார் அவர். தத்யங்கர் என்று அவரை சொல்வார்கள். அதாவது தயிர் போன்று இறுகிய உடல் உடையவர் என்று பொருள். அவர் இந்திரன் பால் மிகுந்த அன்பு உடையவர். அவர் சொன்னார் “ இந்திரனே, கவலையில் ஆழ்ந்திருப்பதால் ஒரு பயனும் இல்லை. உண்மை என்ன ? உன்னிடம் தேவையான ஆயுதம் இல்லை. என் எலும்புகளோ பல ஆண்டுகள் செய்த கடும் தவத்தின் பயனாக வஜ்ரம் போல் வலுப்பெற்றுள்ளன. ஆனால் உனக்கு உபயோகப்பட ஒன்று செய்கிறேன். இப்போதே யோஜிக்காமல் நான் உயிரை விடுகிறேன். என் உடலில் உள்ள எலும்புகளை எடுத்து ஆய்தமாக்கி போர் புரி.” என்று சொல்லி பதிலை எதிர்பார்க்காமல் தன் உயிரை விட்டார். இந்திரன் அவர் முதுகெலும்பை எடுத்து வஜ்ராயுதம் என்று பெயர் சூட்டி போருக்கு கிளம்பினான். மற்றவர்களும் உற்சாகத்துடன் சென்றார்கள். போரினில் அசுரர் தோல்வி கண்டு ஓடினார்கள். தன் உயிரை பொருட் படுத்தாமல் தீய சக்திகள் தோற்க தன் எலும்பையே கொடுத்த ததீசி முனிவரின் நினைவாக இன்றும் பரம வீர் விருது போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த க்கதையை வள்ளுவப்பெருமானின் குறள் நமக்கு நினைவுறுத்துகிறது.

Friday, December 30, 2016

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-22

குறள் எண் 291 அதிகாரம் 30 வாய்மை


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

பொருள்: யாதொரு உயிருக்கும் கெடுதல் இல்லாமல் பேசுவது வாய்மை என கூறப்படுகிறது


வாய்மை என்பது உண்மையை சொல்வது மட்டும் அல்ல. உண்மை என உள்ளத்தில் தோன்றியதை வாயால் சொல்வதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை அதன் விளைவுகளை சிந்தித்தபின் சொல்லும் முறையில் வேண்டுமானால் மாற்றம் செய்து சொல்வது. “ஸத்யம் ப்ரூயாத், ப்ரியம் ப்ரூயாத் ந ப்ருயாத் ஸத்யம் அப்ரியம் ” என்று வேதம் மற்றவருக்கு இதம் தராததை சத்தியமாக இருந்தாலும் சொல்லாதே என்று  சொல்கிறது. “ப்ரியம் நான்ருதம் ப்ருயாத்”  இதம் அளிக்கும் என்பதற்காக பொய் சொல்லாதே என்பது புரிகிறது. சத்தியமும் சொல்லவேண்டும். மற்றவருக்கு தீமையும் வரக்கூடாது என்றால் இது புரிது கொள்ள கடினமாக உள்ளது. இதனை விளக்க ஒரு கதையைப்பார்ப்போம். ஆதாரம் http://www.kamakoti.org/kamakoti/details/devibhagvatpurana24.html


கோசல தேசத்தில் தேவவ்ரதன் என்றொருவன் இருந்தான். ஒரு பிள்ளையை வேண்டி யாகம் பல செய்தான்.  யாகத்தில் கோவிலர் என்ற ரிஷி வேதம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வேதத்தின் மந்திரங்களை (ராவணன் போல) இசை வடிவில் பாடக்கூடியவர். சாம கானம் என்று சொல்வர். இசையாக ப்பாடும்காலத்து சொற்களை ப்பிரித்து இசைப்போக்கோடு இணைத்து ப்பாடுவது முறை. அது அறியாது தேவவிரதர் “என்ன ஐயா, வேதத்தில் உள்ள சொற்களை ப்பிரித்தும் சிதைத்தும் பிழையாக சொல்கிறீரே என கோபிக்க உடனே கோவிலர் “ உனக்கு மகன் பிறப்பான், ஆனால் அவன் முட்டாளாக இருப்பான்” என சபித்து விட்டு சென்று விட்டார். அவர் சொன்னது போல தேவவிரதனுக்கு பையன் பிறந்தான். ஆனால் முட்டாள் ஆக இருந்தான். தேவவிரதன் என்னென்னவோ செய்தும் படிப்பு ஏறவில்லை. ஆனால், ஒரு நல்ல குணம் அந்த ப்பிள்ளை பொய்யே சொல்லமாட்டான்.  ஒரு நாள், தன் தகப்பனார் தொல்லை  தாளாமல், வீட்டை விட்டு ஓடி ஒரு காட்டுக்கு ப்போய் அங்கு ஒரு குடிலை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தான். அங்கு இருந்த காட்டு வாசிகளோடு பழகத்துவங்கினான். அவர்களுக்கு அவன் மூடன் என்பது தெரியவில்லை. அது பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. ஆனாலும், உண்மையே பேசுபவன் என்று தெரிந்ததால், சத்யவிரத முனி என்று அவனை அழைத்து வந்தனர். ஒரு நாள், ஒரு காட்டு பன்றியை ஒரு வேடன் துரத்தி வந்தான். அந்த வேடன் காட்டு மிருகங்களை க்கொன்று அதன் இறைச்சியை விற்பவன்.அந்த காட்டு பன்றி ஓடி வந்து சத்ய விரதன் குடிலில் நுழைந்து ஒளிந்து கொண்டது. துரத்தி வந்த வேடன் குடில் வரை வந்து வாசலில் நின்றவாறே “ முனிவரே, இங்கு ஒரு காட்டுப்பன்றி ஓடி வந்ததா?” என்றூ கேட்டான். சத்யவ்ரதருக்கு ப்ரச்சினை ஆரம்பித்தது. அவர் பொய் சொல்லமாட்டார். ஆனால், இங்கு உண்மையை சொன்னால் காட்டு பன்றி பிடிபடும். என்ன செய்வது என்று யோஜித்தார்.  “யாதொன்றும் தீமை இலாது சொலல்”. இங்கு உண்மை சொன்னால் ஒரு உயிர் போகும். சொல்லாமல் இருந்தால் வேடனுக்கு அவன் இன்றைய பொழுது வீணாகும். சாகும் அளவு தீமை இல்லை. எனவே வேடனைப்பார்த்து  திடுக்கிட்டவர் போல ஒரு முறை பரக்க பரக்க பார்த்து விட்டு மறுபடி கண்களை மூடிக்கொண்டார். “ஐம், ஐம், ஐம்” என்றார்.  வேடன் பார்த்தான். ஒரு வேளை அவர் தியானத்தை க்கலைத்து விட்டோமோ என்று பயந்து போய் “ ஐயா, மன்னிக்கணும். நீங்க தவம் பண்ணுங்க. நான் போறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். காட்டுபன்றியும் ஓடி விட்டது. இருந்தாலும், அவனுக்கு உள்ளூற சந்தேகம். அந்த குடிலுக்கு அருகில் உள்ளவர்களை விசாரிக்க ஆரம்பித்தான். “ அதென்ன, அந்த முனிவர் ஐம் ஐம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாரே, அது என்ன தவம்?” என்று கேட்டான்.
அங்கிருந்த பழங்குடியினர் “ என்னது, சத்யவிரதர் ஐம், ஐம் என்று சொல்கிறாரா, எங்களுக்கு தெரியவில்லையே, அவரையே கேட்போம். வா” என்று அழைத்து சென்றனர். எல்லோரும் வருவதை சத்யவிரதர் பார்த்தார். “இதென்னாடா, வம்பா போச்சு? சும்மா அந்த காட்டு பன்றியை காப்பாற்ற ஐம் ஐம் என்று சொல்லப்போய் இவர்கள் எல்லோரும் தவம் செய்வதை பார்க்க வருகிறார்களே என்று மறுபடி ஆசனத்தில் அமர்ந்து “ஐம் ஐம் ஐம்” என்று சொல்ல துவங்கினார்.


வேடனோடு வந்த பழங்குடியினர் “ஆமாம், ஐயா ஏதோ நம்ம நன்மைக்காக தவம் செய்யுறாரு. நீ போய் கெடுக்க இருந்தியே” என்று வேடனை கடிந்துகொண்டு “ஐயா, நீங்க தவம் பண்ணுங்க, பயம் வேண்டாம். யாராவது எங்க கூட்டத்திலே ஒருத்தன் இங்க உட்கார்ந்திருப்போம். எது வேணாலும் கேளுங்க. இந்த மாதிரி வேடன் எவனாவது வந்தா ஒரு கை பாத்துடலாம்” என்று சொல்லி விட்டு சென்று விட்டனர்.
ஒரு ஆள் அங்கே காவலுக்கு உட்கார்ந்தான். சத்யவிரதர் இப்போது கட்டாயமாக தவம் செய்தே ஆக வேண்டிய நிலை. “ஐம். ஐம், ஐம்” என்று இடைவிடாது ஜபம். வேறு வழி?. நாட்கள் ஆகின்றன. எதோ கொஞ்சம் உண்டு விட்டு மிச்ச நேரம் முழுக்க “ஐம், ஐம்” என்ற தவம். அவருக்கு தெரியாது.”ஐம்” என்பது கலைமகளுக்கான அட்சரம் என்று. ஒரு வாரம் ஜபம் முடிந்த உடன் அவருக்கு கலை மகள் காட்சி தந்து “ மகனே, என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டாள். சத்ய விரதர் சொன்னார் “ அன்னையே, பிறந்ததிலிருந்து முட்டாள் என்று அழைக்கும் நிலை என்னுடையது. என்னை ஒரு அறிவாளியாக மாற்ற வேண்டும். அது தான் எனக்கு வேண்டும்” என்று சொன்னவுடன் கலைமகள் அவருக்கு எல்லா அறிவையும் தந்தருளினாள்.

சத்யவிரதருக்கு கலைமகள் அருள் புரிந்தது ஜபத்தினாலா அல்லது அவர் செய்த வாய்மையே பேசுவது என்ற தவத்தினாலா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

திருக்குறளில் இந்து சமயக்கருத்துகள்-21

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

பொருள் : இறைவன் திருவடியை ப்பிடித்து க்கொண்டவருக்கு மற்ற இவ்வுலக பற்றுகள் தானே விலகும்.


ஸ்வாமி சின்மயானந்தர் அவர்கள் மும்பையில் தனது பவ்வாய் ஆசிரமத்தில் ஞான யக் ஞம் என்ற தலைப்பில் சொற்பொழிவுகள் செய்வார். அவற்றை க்கேட்கும் நற்பேறு எனக்கு கிடைத்தது. அப்போது ஒரு நாள் கீதை ஒன்பதாம் அத்தியாயம் பற்றி விளக்கும்போது இந்து மதம் என்றால் என்ன ? என்ற கேள்விக்கு விடை அளிக்க முற்பட்டார். மாத்துங்கா ரயில் நிலயத்தில் சபர்பன் ரயிலில் கூட்டத்தில் எப்படி ஏறுகிறீர்கள்? அது தான் இந்து மதம் என்றாரே பார்ப்போம். காலை 9 மணிக்கு மாத்துங்காவில் பீக் அவரில் ரயில் ஏறுவது என்பது எளிது அல்ல. நேரம் மிக குறைவு. எப்படியாவது முண்டி அடித்து ஏறி விட வேண்டும். மும்பைக்கு புதிதாக வருபவர் திகைத்து நிற்பர். இதற்கு ஒரு டெக்னிக் உண்டு. முதலில்  ரயிலில் யாராவது ஒருவரின் கையையோ பையையோ பிடித்து க்கொள்ள வேண்டும். பிறகு காலை மெதுவாக பிளா ட்பாரத்திலிருந்து எடுத்து விட வேண்டும். ஒரு கணம் தான்,  நாம் ரயிலுக்குள் வந்து விடுவோம். இதை சின்மயானந்தர் attachment detachment என்றார். Detachment மட்டும் அல்ல இந்து மதம். இருப்பதையும் விட்டு விட்டால் எங்கே போவது? முதலில் இறைவனின் திருவடியை பிடி. பிறகு உலகப்பற்றை விடு என்பது தான் அவர் அறிவுரை. இது தெரியாமல் பலர் நான் உலகப்பற்றை விடுகிறேன் என்று துவங்கி வழி மாறி ப்போய் விடுவதை பார்க்கிறோம்.
இதற்கு நல்ல உதாரணம் துருவன்.  உத்தானபாதன் என்ற அரசருக்கு இரு மனைவிகள்.  சுநீதி முதல் மனைவி. சுருசி இரண்டாவது மனைவி. சுனீதியின் மகன் துருவன். சுருசியின் மகன் உத்தமன். ஒரு நாள் அரசன் சுருசியோடும் உத்தமனோடும் தனித்திருக்கும் போது அங்கு வந்த 5 வயதுக் குழந்தை துருவன் தானும் தந்தை மடியின் மேல் உட்கார முயன்றான். அதனை க்காணப்பொறுக்காத சுருசி அவனை தள்ளி விட்டு விட்டு “ அப்பா மடி மேல் நீ ஏற வேண்டும் என்றால் என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்” என்று கடும் சொற்களால் சாடினாள். அழுது கொண்டே வரும் துருவனை அவன் அன்னை சுனீதி அவனை த்தேற்றி “அப்பா, நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான். அப்பாவுக்கோ சித்தி மீதுதான் பிரியம். நீயோ என் மகன். அதனால் தான் இப்படி கடும் சொற்களை நீ கேட்க வேண்டியதிருக்கிறது.” என்று சொன்னாள். துருவன் விடவில்லை,” இல்லையம்மா, இந்த நிலை மாற வேண்டும். எனக்கும் அப்பா மடி மேல் உட்கார வேண்டும். “ என்று பிடிவாதம் பிடிக்கவே சுனீதி, “ கண்ணா, அது நிச்சயம் நடக்கும். நாராயணரை வேண்டு” என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தாள்.” நாராயணர் எங்கு இருப்பார்?” அடுத்த கேள்வி. “ சரி தான் போ, அது எனக்கென்ன தெரியும்? காட்டில் தவம் செய்கிறார்களே, முனிவர்கள், அவர்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம்” என்றூ சொல்லி தூ ங்க வைத்தாள். துருவன் தூங்கிவிட்டதைப்போல் நடித்து விட்டு,  அம்மா துயின்றதும் அறையை விட்டு நழுவினான். நள்ளிரவு, குழந்தை துருவன் அரண்மனையிலிருந்தும் கிளம்பி காட்டுக்கு நாராயணனை த்தேடி சென்றான். அங்கு அவன் அதிர்ஷ்டம் சப்த ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தனர். ஒரு ஐந்து வயது பாலகன் இந்த நள்ளிரவில் காட்டுக்குள் தனியாக வருவது கண்டு அவர்களுக்கு அதிசயம்.”யாரப்பா, நீ தனியாக எதற்கு காட்டுக்குள் வருகிறாய்?” என்று அவர்கள் அன்புடன் கேட்டார்கள். துருவன் எல்லா விவரத்தையும் சொல்லி இதற்கெல்லாம் தீர்வு காண நாராயணரை பார்த்தே ஆக வேண்டும் என்ற தன் உறுதியை தெரிவித்தான். ரிஷிகளுக்கு ஆச்சரியம். இத்தனை சின்ன வயதில் இவ்வளவு உறுதியா? என்று வியந்த படி “ சரி, துருவா, நீ இங்கு அமர்ந்து ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரத்தை விடாமல் சொல்லி வா. நிச்சயம் நாராயணர் வருவார்” என்று சொல்லி விட்டு புறப்பட்டார்கள். துருவன் அவர்களை நிறுத்தினான் ”ஒரு நிமிஷம் இருங்கள். நாராயணர் எப்படி இருப்பார்? அதையும் சொல்லுங்கள். அப்போது தானே  என் தவத்தின் பயனாக அவர் வரும்போது யார் என்று எனக்கு அடையாளம் தெரியும்?” என்றான். ரிஷிகள் தங்கள் மனத்துள் அவனை மெச்சியவாறே “ அதென்னப்பா, பெரிய விஷயம். சங்கு, சக்கரம் வைத்திருப்பார். மார்பில் கௌஸ்துப மணி, இடுப்பில் பட்டு பீதாம்பரம், நீளமாக மிக அழகான மாலை எல்லாம் அணிந்திருப்பார். போதுமா?’ என்று விளக்கி விட்டு சென்றார்கள். அதற்குப்பிறகு ஐந்து மாதம் துருவன் தவம் செய்தான். முதலில் காய், கனி சாப்பிட்டவன் ஐந்தாவது மாதம் எதையும் உட்கொள்ளவில்லை. பெருமாள் எப்படி பொறுப்பார்? உடனே அவன் முன் தோன்றினார். “ துருவா கண்ணைத்திறந்து பார். நான் தான் நாராயணன் வந்திருக்கிறேன்” என்றார். துருவன் கண்ணை த்திறந்து பார்த்தான். ஸ்வாமி மாலை அணியாமல் வந்து விட்டார். துருவன் “இல்லை, நீங்கள் நாராயணன் இல்லை. மாலை எங்க்கே? என்று கேட்டவுடன் ஒரு நிமிடம் கண்ணை மூடி க்கொள் என்று சொல்லி ஒரு நிமிடத்தில் சங்கு, சக்கரத்துடன், கௌஸ்துப மணீ, பட்டு பீதாம்பரம் எல்லாம் அணிந்து கொண்டிருக்கிறாரா என்று முழுவதும் ஒரு முறை சரி பார்த்து விட்டு” ஸ்வாமி’ என்றூ காலில் விழுந்தான். “ குழந்தாய், இனிமேளும் இப்படி உன்னை வருத்தி க்கொள்ளாதே. உனக்கு என்ன வேண்டும்? கேள்” என்றார். துருவனுக்கு அப்போது தான் எதற்கு வந்தோம் என்று மறந்து விட்டது. இறைவன் வந்த வுடன் மற்ற பற்றுகள் தாமே விலகி விடும் அல்லவா? “ யோஜிக்கிறான். பிறகு, “ ஸ்வாமி, எனக்கு எதுவும் வேண்டாம். உங்களை மறக்காமல் இருக்க அருள் புரிய வேண்டும்” என்றான். பெருமாள் சிரித்தார். அவருக்கு மறக்கவில்லை. “ துருவா, நீ முதலில் உன் வீட்டுக்கு செல். உனக்கு அரசனின் அன்பு மட்டும் அல்ல. அரச பதவியும் கிடைக்கும். அரசாண்ட பின் உன் பெருமை என்றும் எல்லோருக்கும் தெரியும் வண்ணம் துருவ நக்ஷத்திரமாக சுடர் விடுவாய்” என்று வரம் தந்தார்.

துருவன் ஐந்து வயதில் இறைவனை பற்றினான் என்பதும் அந்த பற்று வலிமையோடு இருந்ததால் மற்ற பற்றுகள் விலகின என்பதும் இக்கதையிலிருந்து குறளுக்கு  கிடைக்கும் விளக்கம்.