குறள் 341 அதிகாரம் 35 துறவு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
பொருள் : எதனின்றும் நீ விடுபட்டிருக்கிறாயோ அதனால் உனக்கு துயர் இல்லை. (யாதனின், எதனின் என்று இரு முறை வருவது அழுத்தமாக கருத்தை தெரிவிக்கிறது).
நம் துயர் எதனால் என்று பார்த்தோமானால், நாம் எதனிடம் ஈடு பட்டிருக்கிறோமோ, அதன் விளைவால் தான் என்பது தெரிய வரும். அது வீடாக இருக்கலாம். நிலமாக இருக்கலாம். பதவியாக இருக்கலாம். காதலியாக இருக்கலாம். ஏன், ஒரு ரசகுல்லாவாகக்கூட இருக்கலாம். ஒரு ஆங்கிலேய எழுத்தாளர் சொன்னது போல் “முதலில் செல்வத்தை நீ ஆள்கிறாய். பிறகு அது உன்னை ஆள்கிறது”. எவ்வளவு உண்மை?
இதனை ஒரு கதை மூலம் புரிந்து கொள்ளலாம். முன்னொருகாலம் இன்னாட்டை பரதர் என்ற ஒரு அரசர் ஆண்டு வந்தார். (ராமர் தம்பி இல்லை). வயதான உடன், அந்த கால வழக்கப்படி, தன் பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு காட்டுக்கு புறப்பட தயார் ஆனார். யோஜித்தார். அரசு பதவி தானே ? அது என்ன பெரிய விஷயம்? பிள்ளைக்குக் கொடுத்தார். அரண்மனை அதன் வசதியான வாழ்வு? அதிலெதற்கு நமக்கு பற்று? விட்டுவிட்டார். யானை, குதிரை, ரதம், மெய்க்காவல் எல்லாவற்றையும் இது எதற்கு? இது எதற்கு? என்று கேட்டு பொருளால் மட்டும் அல்ல மனத்தாலும் துறந்தார். திருவள்ளுவர் சொன்னது போல் யாது? யாது? என்று கேட்டு ஒவ்வொன்றையும் விட்டு விட்டார் ! கானகம் சென்றார். தனக்கென ஒரு குடிலை அமைத்துக்கொண்டார். தினமும் மெய்ப்பொருள் பற்றி தவத்தில் ஈடுபட்டார். அவர்க்கென்று அப்போது எதுவும் இல்லை. அருகில் உள்ள நதியில் ஸ்னானம் செய்யவேண்டியது. பரம்பொருளை நினைத்து இடைவிடாத த்யானம் பண்ணுவது. இடையில் கையில் கிடைத்த கனி கிழங்கை புசிப்பது. இது தான் அவர் தினசரி வாழ்க்கை. எதிலும் பற்றில்லை. ஆதலால், எதனாலும் துயரில்லை. இப்படி ஆண்டுகள் உருண்டோடின. ஒரு மஹரிஷியாகவே ஆகிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அப்போது இறைவன் தன் திருவிளையாடலை துவக்கினான்.
ஒரு நாள் நதியில் குளிக்க வந்தார். மான் ஒன்று தண்ணிர் குடித்து க்கொண்டிருந்தது. தூரத்திலிருந்து சிங்கம் ஒன்று கர்ஜிக்கும் சத்தம் கேட்டது. அச்சமுற்ற மான் பயந்து போய் ஒரே தாவில் நதியை க்கடந்து செல்ல எண்ணி தாவிற்று. அது ஒரு பெண்மான். கருவுற்றிருந்த நிலை. பூரண கர்ப்பம். தாவும்போது கருவை ஈன்றது. அந்த வலியிலேயே உயிர் துடித்து நதியில் விழுந்து இறந்தது. குட்டியோ நதியில் விழுந்து தத்தளித்தது. நதி அதை அடித்து சென்றது.குளிக்க வந்த பரதர் அந்த மான் குட்டியை ப்பார்த்து பரிதவித்தார். ஒரு அரசனாயிருந்து பல்லாயிரக்கணக்கான குடிமக்களை க்காத்தவர் அல்லவா? அவருக்கு கருணை பிறந்தது. நீந்தி சென்று அந்த மான் குட்டியை தன் கையில் ஏந்தி காப்பாற்றினார். அதை தன் குடிலுக்கு எடுத்து வந்தார். உலர்ந்த புல் படுக்கையில் அதை படுக்க வைத்தார். சிறந்த கனிகளை பறித்து வந்து தந்தார். நாளடைவில் அவர் பராமரிப்பில், அந்த குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்தது. குடிலில் அது துள்ளி க்குதித்து விளையாடியது. அதைப்பார்த்துக்கொண்டிருப்பதே பரதருக்கு மனோரஞ்சகமாக இருந்தது. நாள் ஓடுகிறது. பகவத் த்யானத்துக்கு நேரமே கிடைக்கவில்லை. சிறிது நேரம் த்யானத்தில் அமர்வதற்குள், ஐயையோ மானுக்கு உணவு வேண்டுமே ? என்று யோஜனை வந்து விடும். இல்லையென்றால், அது எங்கு ஓடி விட்டதோ என்று பதட்டப்படுவார். அது சில நாள் வெளியில் மேயப்போனால் கூட கவலையோடு உட்கார்ந்திருப்பார். ஏதாவது சிங்கம், புலி கொன்றிருக்குமோ? என்று மனம் அடித்துக்கொள்ளும். அது வந்த பிறகு தான் அவருக்கு நிம்மதி வரும். இரவு ஆனால், குடிலுக்குள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் உறங்கியவர் ஒரு கதவு செய்து அதை சாத்திக்கொண்டார். இரவில் ஓனாய், நரி, வருமோ என்ற பயம். அவருக்கும் முதுமை வந்தது. வாழ்னாள் முடியும் தருணம். எல்லாவற்றையும் விட்டவர் ஆயிற்றே ! பிள்ளை , குட்டி , மனைவி நினைவு கூட வரவில்லை.ஆனால், கடைசி முறையாக தான் வளர்த்த மானை ப்பார்க்கத்துடித்தார். மனம் இறைவன் பால் செல்லவில்லை. மானின் நினைவாகவே அவர் உயிர் பிரிந்தது. பல வருடங்கள் தவம் செய்தவர் சாகும் வேளை இறைவனின் நினைவு வராமல் ஒரு மானை நினைத்து இறந்தார். அதனால்தானோ என்னவோ,அடுத்த பிறவி மானாகவே பிறந்தார். அந்த பிறவியில் துயரம் பல. அப்பிறவி முடிந்து, அதற்கடுத்த பிறவியில் ஒரு குடும்பத்தில் கடைசி மகனாக ப்பிறந்தார். மூடன் என்ற பெயர் வாங்கினார். எல்லோரும் அவரை கருணையின்றி வேலை வாங்கினர். அவருக்கு பேச்சு கூட சரியாக வராது. உடல் மட்டும் வஞ்சனையின்றி வளர்ந்திருந்தது. ஒரு நாள் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவர் ஆழ்மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள். எதிலும் பிடிப்பில்லை என்பதை உணர்ந்தார். வீடு கூட இல்லை. அண்ணன்மார் தகப்பனார் சொத்தை சுருட்டிக்கொண்டனர். அண்ணிகள் வீட்டு வேலைக்கு அவரை பயன் படுத்தினர். எதற்காக பிறந்தோம் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது ஒரு பல்லக்கு வந்தது. ஒரு அரசன் அமர்ந்து வந்து கொண்டிருந்தான். பல்லக்கு தூக்கி வந்தவர்களில் ஒருவன் உடல் நலம் இல்லாமல் விழுந்து விடவே படை த்தலைவன் பல்லக்கை நிறுத்தினான். அவன் கண்ணில் நல்ல உடல் வாகோடு மரத்தடியில் அமர்ந்திருந்த பரதர் பட்டார். (போன ஜென்மத்துப்பெயரே இருக்கட்டும்) “அட, இவனைக்கூப்பிடலாமே” என்று அவரிடம் சென்று “டேய்!! பல்லக்கு சுமக்க வருகிறாயா?, நல்ல சோறு கிடைக்கும்” என்றார். பரதர் தன் மனத்தில் ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த படியால் பதில் கூறவில்லை. தளபதி அவரை வலுக்கட்டாயமாய் இழுத்து க்கொண்டு வந்து பல்லக்கின் கழியை அவர் தோளில் வைத்தார். பல்லக்கு புறப்பட்டது. பரதர் சென்ற ஜென்ம நல்வினைகளின் பயனாக ஒரு குணம் கொண்டிருந்தார். அது தான் ஜீவகாருண்யம். மறந்தும் அவர் ஒரு ஜீவனை யும் கொல்லமாட்டார். இன்றைக்கு பல்லக்கு சுமக்க ஆரம்பித்தவுடன் அவர் பாடு பொல்லாப்பாடாகி விட்டது. காலின் அருகில் ஊரும் ஒரு எறும்பை ப்பார்ப்பார். ஐயையோ என்று உடனே ஒரு தாவு தாவுவார். பல்லக்கு இரண்டு அடி செல்லும். வழியில் ஒரு தவளையை ப்பார்த்தால் உடனே அதை காப்பாற்ற ஒரு பக்கம் சாய்வார். இப்படி அவர் வளைந்து நெளிந்து தாவி குதித்து சென்றால் மேலே உட்கார்ந்திருக்கும் அரசனுக்கு எப்படி இருக்கும்? அவன் தன் தலையை வெளியே நீட்டி “ அட முட்டாளே !! என்ன ஆயிற்று உனக்கு? தோள் வலித்ததென்றால் பல்லக்கை நிறுத்துகிறேன். சற்று உட்கார்ந்து இளைப்பாறித் தொலையேன்” என்று கத்தினான். இறைவன் பார்த்தான். எந்த ப்பற்றை விட்டாலும் ஒரு மான் குட்டியால் தானே துயர் உற்றார். ஆனால், இந்த அளவு அவருக்கு ஜீவகாருண்யம் உள்ளதே !! ஜீவகாருண்யம் என்பது “பற்றற்றான்” என்று திருவள்ளுவர் சொன்ன இறைவனுக்கே உள்ள பற்றல்லவா? ஆதலால், இனியும் பரதரை சோதிக்கக்கூடாதென்று அவருக்கு உடனே ஞானத்தையும் தந்தருளினான். ஞானம் பிறந்த பரதர் அப்போது அந்த ப்பிறவியில் முதன் முறையாக தெளிவாக ப்பேசினார் “ அரசரே!! யாரை முட்டாள் என்றீர்கள் ? பல்லக்கை சுமக்கும் நானா? உட்கார்ந்திருக்கும் நீங்களா? நாம் இருவரும் ஒரே பொருளால் உண்டானவர்கள். ஆகவே முட்டாள் என்றால் என் பார்வையில் நாம் இருவரும் தான். நீ மேலே உட்கார்ந்து பேசுகிறாய். இறங்கி கொஞ்சம் கீழே பார். இந்த பாதையில் நீ பார்க்காத வகையில் ஊர்கின்ற தவளையும், எறும்பும், அணிலும், பாம்பும், புழுவும், கூட நம்மினும் வேறுபட்டவர் அல்லரே !!. அவர்களையும் தான் நான் எனக்கு சமமாக மதிக்கிறேன். உனக்காக, அவர்களை மிதித்துக்கொன்று நான் எப்படி செல்ல முடியும்? நீ ஒரு உயிர் மகிழ்ந்திருக்க நான் மதிக்கும் இன்னொரு உயிரை நான் எப்படி கொல்வேன்? அது ஒதுங்க மாட்டேன் என்கிறது. ஆகவே தான் நான் அதன் பாதையிலிருந்து ஒதுங்கி ஒதுங்கி செல்கிறேன். உன் பல்லக்கும் ஆடி ஆடி செல்கிறது. ” என்று பதில் இறுத்தார். அரசன் இது ஒரு பல்லக்கு தூக்கும் ஆள் அல்ல நாம் தவறு செய்திருக்கிறோம் என்று புரிந்து கொண்டு பல்லக்கை நிறுத்த சொன்னான். உடனே கீழே குதித்து அவரை அமர சொல்லி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு வணங்கினான். ஆனால், பரதர் அத்தருணம் பேசவில்லை. எப்படி பேசுவார்? இறைவன் அவர் படும் துயரை நீக்கி தன்னோடு சேர்த்துக்கொண்டு விட்டான்.
அவர் மட்டும் அன்று மான் மீது பற்று வைக்காமல் இருந்திருந்தால் செய்த தவத்துக்கு, இந்ததுயர்கள் கூட இல்லாமல் என்றோ பரமன் திருவடியில் கலந்திருப்பாரே !! திருவள்ளுவர் சொன்னது இதுதானே யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.